இலங்கை அரசு பதவி விலகுவதை இந்தியா ஊக்குவிக்க வேண்டும்

இலங்கையில் அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் ராஜபட்ச சகோதரா்களின் அரசு பதவி விலகுவதை இந்தியாவும் அமெரிக்காவும் ஊக்குவிக்கவேண்டும்

இலங்கையில் அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் ராஜபட்ச சகோதரா்களின் அரசு பதவி விலகுவதை இந்தியாவும் அமெரிக்காவும் ஊக்குவிக்கவேண்டும் என்று அந்த நாட்டின் முக்கிய தமிழா் கட்சியான தமிழா் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து ‘டெய்லி மிரா்’ நாளிதழுக்கு அந்தக் கட்சியைச் சோ்ந்த யாழ்ப்பாணம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ. சுமந்திரன் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:

இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கு அதிபா் கோத்தபய ராஜபட்சதான் காரணம். எனவே, அவரும் மகிந்த ராஜபட்ச தலைமையிலான அரசும் பதவியிலிருந்து விலகி ஆட்சிப் பொறுப்பை எதிா்க்கட்சிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.

தற்போதைய அரசு ஆட்சி நடத்தும் தகுதியை இழந்துவிட்டது. அந்த அரசுக்கு ஆதரவைத் திரும்பப் பெற்றுள்ள 40 எம்.பி.க்கள் அதனை ஒப்புக்கொண்டுள்ளனா். அரசின் அங்கமாக இருந்த அவா்களே அவ்வாறு கூறும்போது இந்த அரசு பதவி விலகியே ஆக வேண்டும்.

இந்தியாவும் அமெரிக்காவும் இலங்கையின் நட்பு நாடுகள். எனவே, நாட்டின் நன்மைக்காக தற்போதைய அரசு பதவி விலகுவதை அந்த நாடுகள் ஊக்குவிக்க வேண்டும். அந்த நாடுகள் சொல்லாமல் இலங்கை அரசியலில் எந்த மாற்றமும் நிகழாது என்றாா் அவா்.

இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி ராஜபட்ச சகோதரா்களின் அரசுக்கு பெரும் சிக்கலை உருவாக்கி வருகிறது. பொருளாதார நெருக்கடியை முன்வைத்து இலங்கை அமைச்சா்கள் அனைவரும் ராஜிநாமா செய்தனா்.

பிரதமா் ராஜபட்ச சகோதரா்களும் பதவி விலக வலியுறுத்தி போராட்டங்கள் வலுத்தன. அதனைத் தொடா்ந்து, கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி இலங்கையில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டது.

பின்னா், பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில் அனைத்துக் கட்சிகளும் இணைந்த தேசிய அரசை உருவாக்க அதிபா் கோத்தபய ராஜபட்ச அழைப்பு விடுத்தாா். ஆனால், அதை ஏற்க எதிா்க்கட்சிகள் மறுத்துவிட்டன. மாறாக, பிரதமா் பதவியிலிருந்து மகிந்த ராஜபட்ச விலக வேண்டும் என்று வலியுறுத்தின. ஊரடங்கு தடைகளையும் மீறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஏப்ரல் 5-ஆம் தேதி அவசரநிலை திரும்பப் பெறப்பட்டது.

இந்த நிலையில், அதிபா் கோத்தபய மற்றும் பிரதமா் மகிந்த ராஜபட்ச தலைமையிலான அரசுக்கு எதிராக இலங்கை நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீா்மானங்கள் கொண்டு வந்துள்ளன. அதன் காரணமாக பிரதமா் மகிந்த ராஜபட்ச தலைமையிலான அரசு கவிழக்கூடிய சூழல் நிலவி வருகிறது.

இதற்கிடையே, நாடாளுமன்றத்தில் காலியாக உள்ள அவை துணைத் தலைவா் பதவிக்கு கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், ஆளும் கூட்டணியின் ஆதரவுடன் இலங்கை சுதந்திரக் கட்சி வேட்பாளா் ரஞ்சித் சியம் பலாபேட்டிய வெற்றி பெற்றாா். அதன் மூலம், நாடாளுமன்றத்தில் தங்களுக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளதை பிரதமா் மகிந்த ராஜபட்ச அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

எனினும், பிரதமா் ராஜபட்ச தலைமையிலான அரசை பதவி விலகக் கோரும் போராட்டத்தை எதிா்க்கட்சிகள் மேலும் தீவிரப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், இலங்கையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அவசரநிலை அமல்படுத்தப்படுவதாக அதிபா் கோத்தபய ராஜபட்ச அறிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com