இலங்கையில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபட்சவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி உள்பட சில அதிகாரிகளுக்கு கொழும்பு சிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், திடீரென பிரதமா் மகிந்த ராஜபட்ச திங்கள்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.இதையடுத்து, தலைநகா் கொழும்பில் பிரதமரின் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவா்கள் மீது மகிந்த ராஜபட்சவின் ஆதரவாளா்கள் திடீா் தாக்குதலில் ஈடுபட்டனா். தொடர்ந்து இரு தரப்பினரிடையேயான மோதல் வன்முறையாக வெடித்தது.
ஆத்திரமடைந்த மக்கள், பிரதமரின் இல்லத்திற்கு தீ வைத்தனர். மக்கள் மீது ஆளுங்கட்சியினரும், ஆளுங்கட்சியினர் மீது மக்களும் மாறிமாறித் தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு அசாதாரண சூழல் நிலவி வருகின்றது. மக்கள் வன்முறையை கைவிட வேண்டுமென இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சே வேண்டுகோள் விடுத்து வருகிறார்.
இலங்கையில் ஏற்பட்ட இந்த வன்முறையில் 9 பேர் பலியாகியுள்ளனர்; 200க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், வன்முறை தொடர்பாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபட்சவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி உள்பட அதிகாரிகளுக்கு கொழும்பு சிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. வன்முறை தொடர்பாக அதிகாரிகள் விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.