அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில் இலங்கையிலிருந்து வெளியேற முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபட்ச, அவரது மகன் நமல் உள்பட 17 பேருக்கு தடை
விதித்து இலங்கை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
திங்கள்கிழமையன்று அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வந்த போராட்டக்காரர்கள் மீது வன்முறை நடத்தியது தொடர்பாக விசாரிக்க காவல்துறையினருக்கு கொழும்பு நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டுள்ளார். இந்த வன்முறையில் சிக்கி ஒன்பது பேர் கொல்லப்பட்டது மட்டுமின்றி எதிர் தரப்பினரும் பதிலுக்கு தாக்குதல் நடத்த இது கலவரமாக மாறியது.
ராஜபட்ச மற்றும் அவரது சகாக்களை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், சந்தேகத்திற்கு உள்ளானவர்களை கைது செய்ய காவல்துறையினருக்கு ஏற்கனவே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதால் இந்த கோரிக்கை நீதிமன்றம் ஏற்கவில்லை.
தலைநகர் கொழும்புவில் 3,000க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களை குவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்திவந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தும்படி அவர்களை ஏவிவிட்டது ராஜபட்சவும் அவரது சகாக்களும்தான் என
வன்முறையில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை தடி மற்றும் கொம்புகளை எடுத்து வந்த அந்த கும்பல் கொடூரமாக தாக்கியது.
பெளத்த துறவிகள், கத்தோலிக்க பாதிரியார்கள் என இந்த வன்முறையில் சிக்கிய 250க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதற்கிடையே, நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள கடற்படை தளத்தல் மகிந்த ராஜபட்ச மறைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.