‘அடுத்த 2 மாதங்கள் வாழ்வில் கடினமானதாக இருக்கும்’: இலங்கை பிரதமர் உரை

அடுத்த இரண்டு மாதங்கள் நமது வாழ்வில் மிகவும் கடினமானதாக இருக்கும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திங்கள்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
ரணில் விக்ரமசிங்கே
ரணில் விக்ரமசிங்கே

அடுத்த இரண்டு மாதங்கள் நமது வாழ்வில் மிகவும் கடினமானதாக இருக்கும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திங்கள்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

இலங்கை பொருளாதாரத்தை முறையாக வழிநடத்தத் தவறியதால், அதிபா் பதவியை கோத்தபய ராஜபட்ச ராஜிநாமா செய்யக் கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பிரதமராகப் பதவி வகித்து வந்த மகிந்த ராஜபட்ச ராஜிநாமா செய்ததையடுத்து, அதிபா் கோத்தபய ராஜபட்சவால் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, புதிதாக 4 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

இந்நிலையில், நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ரணில் விக்கிரமசிங்க பேசியதாவது:

நாட்டை காப்பாற்ற மிகப்பெரிய சவாலை நான் ஏற்றுக் கொண்டுள்ளேன். நிலைமையை சீர்செய்ய எனக்கு நேரம் கொடுங்கள். அனைத்து விதமான எரிபொருள் விற்பனையிலும் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மின்சார விநியோகத்திலும் ஒரு யூனிட்டுக்கு ரூ. 30 இழப்பு ஏற்பட்டுள்ளது.

எரிவாயு இறக்குமதிக்கு தேவைப்படும் 50 லட்சம் அமெரிக்க டாலர்களை திரட்டுவது கடினமாக உள்ளது. கடந்த 4 மாதங்களாக மருந்து இறக்குமதிக்கான தொகையை அரசு செலுத்தவில்லை. சுமார் ரூ. 3,400 கோடி செலுத்த வேண்டியுள்ளன.

தற்போது ஒரு நாளுக்கு தேவையான பெட்ரோல் மட்டுமே நம் கைசவம் உள்ளன. நேற்று டீசல் இறக்குமதி செய்யப்பட்டதால், டீசல் பிரச்னை சற்று குறைந்துள்ளது.

நிகழ்வாண்டிற்கான புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளோம். வரும் காலங்களில் சலுகைகள் கொண்ட வரவு செலவு திட்டத்தை அரசு முன்வைக்கும்.

பெரும் நஷ்டத்தை சந்தித்து வரும் இலங்கை ஏர்லைன்ஸை தனியார்மயமாக்க நான் முன்மொழிந்துள்ளேன். கடந்த 2020-2021 ஆண்டில் மட்டும் ரூ. 1,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு மாதங்கள் நமது வாழ்வில் மிகவும் கடினமானதாக இருக்கும்.
ஒருவரையோ, ஒரு குடும்பத்தையோ, ஒரு சமூகத்தினரையோ காப்பாற்றுவது எனது நோக்கம் கிடையாது. நாட்டு மக்கள் அனைவரையும் காப்பாற்றுவதே எனது பொறுப்பாகும்.

இந்த சவாலை ஏற்று வெற்றிக்கொள்வேன். அனைவரது ஒத்துழைப்புகளும் எனக்கு வேண்டும். எனது பொறுப்பை நாட்டிற்காக நான் நிறைவேற்றுவேன். இது நான் உங்களுக்கு வழங்கும் உறுதிமொழியாகும்” என்று பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com