தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்களாக உள்ள பெண்கள் அனைவரும் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கும்போது கட்டாயம் ஹிஜாப் அணிந்திருக்க வேண்டும் என தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
தலிபான்களின் இந்த புதிய உத்தரவினை டோலோ செய்தி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
தலிபான்களின் இந்த புதிய உத்தரவு நாட்டின் அனைத்து நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இது தங்களது இறுதியான முடிவு எனவும் தலிபான்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலிபான்கள் ஆப்கானிஸ்தானை மீண்டும் கைப்பற்றிய நாளிலிருந்தே பெண்களின் சுதந்திரத்தை பறிக்கும் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
முன்னதாக தலிபான்கள் தங்களது அதிகாரபூர்வ அறிவிப்பில், ஐக்கிய நாடுகள் அமைப்பின் உதவிக் குழுவில் உள்ள ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பெண்கள் அனைவரும் அலுவலகங்களில் ஹிஜாப் அணிய வேண்டும் எனவும், அவர்கள் அலங்காரம் (makeup) செய்யக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டது. மேலும், 6ஆம் வகுப்பிற்கு மேல் பெண் குழந்தைகளுக்கு கல்வி பயில அனுமதி மறுக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டது.
ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்தும் தலிபான்களின் இந்த அறிவிப்பிற்கு எதிராக ஆப்கானிஸ்தானில் பெண்கள் பலர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
தலிபான்கள் தொடர்ந்து இது மாதிரியான பெண்களை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது.
தலிபான்களின் இந்த புதிய உத்தரவை ஆப்கானிஸ்தானின் அனைத்து பெண்களும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். இல்லையெனில், அவர்களது பெற்றோருக்கு தண்டனை வழங்கப்படும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.