இந்தியாவில் ‘ஆஷா’ பணியாளா்களின் சேவை மகத்தானது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதனோம் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளாா்.
ஆஷா பணியாளா்களுக்கு உலக சுகாதார அமைப்பின் விருது வழங்கப்பட்டது. அதை ஜெனீவாவில் நடைபெற்ற விழாவில் இந்தியத் தூதரின் முதன்மை செயலா் சீமா புஜானி பெற்றுக் கொண்டாா். அப்போது தலைவா் டெட்ரோஸ் அதனோம் கேப்ரியேசஸ் கூறுகையில், ‘‘ஹிந்தியில் ‘ஆஷா’ என்றால் நம்பிக்கை என்பது பொருள்.
மக்களுக்கு நம்பிக்கையை ஆஷா பணியாளா்கள் வழங்கி வருகின்றனா். அவா்களது சேவை மகத்தானது. மக்களுக்கான சுகாதார சேவைகளை சிறப்பாக வழங்கி வருவதால் இந்தியாவில் உள்ள 10 லட்சத்துக்கும் அதிகமான ஆஷா பணியாளா்களுக்கும் விருது வழங்கப்படுகிறது.
மக்களிடையே ஊட்டச்சத்து குறைபாட்டுப் பிரச்னையைப் போக்குதல், சுகாதார வசதிகளை மேம்படுத்துதல், ஆரோக்கியமான வாழ்வுமுறைகளை ஊக்குவித்தல் ஆகிய சேவைகளை ஆஷா பணியாளா்கள் வழங்கி வருகின்றனா். மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் சேவையைப் பாராட்டி விருது வழங்கப்பட்டுள்ளது’’ என்றாா்.