சௌதி அரேபியாவில், வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டு, கார்கள் அடித்துச் செல்லப்படும் நிலை உருவாகியிருக்கிறது.
வியாழக்கிழமை, சௌதி அரேபியாவின் மேற்குப் பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
ஜெட்டா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் திடீரென பெய்த கனமழையில் நேரிட்ட அசம்பாவிதங்களில் சிக்கி இரண்டு பேர் பலியாகினர். பாதுகாப்புக் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
அவசியம் இன்றி மக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்று மெக்கா நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
சவூதி அரேபியாவின் மிகப்பெரிய இரண்டாவது நகரமான ஜெட்டாவில் 40 லட்சம் மக்கள் வசித்து வரும் நிலையில், இந்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான இடங்களுக்கு கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
பாதுகாப்புக் கருதி, கனமழை தொடங்கியபோதே, மெக்கா யாத்திரை செல்லும் முக்கிய சாலை மூடப்பட்டது. கனமழை நின்ற பிறகே சாலை திறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளனர். சாலைகளில் தேங்கியிருக்கும் மழை நீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பல பகுதிகளில் வானிலை காரணமாக நேற்று விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல விமானங்கள் தாமதமாக தரையிறங்கின. சில விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றுள்ளன. ஜெட்டாவில் தரையிறங்க வேண்டிய சில விமானங்கள் வேறு நகரங்களுக்கு மாற்றிவிடப்பட்டன.