எலான் மஸ்க் வசமானது ட்விட்டர்: முக்கிய அதிகாரிகள் அதிரடியாக நீக்கம்!

சமூக வலைதளமான ட்விட்டர் எலன் மஸ்க் வசமான சில மணி நேரங்களிலேயே முக்கிய அதிகாரிகள் 4 பேரை நீக்கினார் எலான் மஸ்க்.
எலான் மஸ்க்
எலான் மஸ்க்


சமூக வலைதளமான ட்விட்டர் எலன் மஸ்க் வசமான சில மணி நேரங்களிலேயே முக்கிய அதிகாரிகள் 4 பேரை அதிரடியாக நீக்கினார்  எலான் மஸ்க்.

உலகின் முன்னணி பணக்காரரான தொழிலதிபர் எலான் மஸ்க், கடந்த ஏப்ரல் மாதம் பிரபல சமூக பலைத்தளமான ட்விட்டரை முழுமையாக வாங்குவதாக அறிவித்தார். அதனைத் தொடர் ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 44 பில்லியன் டாலருக்கு(ரூ.30 ஆயிரம் கோடி)  வாங்குவதாக அறிவித்தார். 

இதையடுத்து ட்விட்டரை நிறுவனத்தை தன் வசமாக்கியதை குறிக்கும் விதமாக வியாழக்கிழமை அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டர் நிறுவன தலைமையகத்திற்கு கை கழுவப் பயன்படுத்தும் தொட்டியுடன் சென்ற விடியோ ஒன்றையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். பின்னர், தலைமை அலுவலகத்தில் உள்ள ஊழியர்களிடம் சிறுது நேரம் ஆலோசனை நடத்தினார். 

இந்நிலையில், வியாழனன்று ட்விட்டரை வாங்குவதற்கான 44 பில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்தத்தை மஸ்க் முடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். 

இதையடுத்து ட்விட்டர் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை நிறைவேற்றும் விதமாக ட்விட்டரின் முழு கட்டுப்பாட்டை தன் வசமாக்கியுள்ள எலான் மஸ்க், தனது ட்விட்டர் கணக்கின் பயோவை 'Chief Twit' என மாற்றியுள்ளார்.

அதிரடி நீக்கம்: ட்விட்டரின் புதிய உரிமையாளரான எலான் மஸ்க், அடுத்த சில மணி நேரங்களிலேயே  குறைந்தபட்சம் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் நான்கு பேரை அதிரடியாக நீக்கிவிட்டு ட்விட்டர் நிறுவனத்தை சுத்தம் செய்ய தொடங்கியுள்ளார். 

அதாவது, நிறுவனத்தின் இந்திய வம்சாவளி தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால், தலைமை நிதி அதிகாரி நெத்செகல்,  உயர்மட்ட சட்ட நிர்வாகி விஜயா காடே மற்றும் பொது ஆலோசகர் சீன் எட்ஜெட் ஆகிய  நான்கு முக்கிய அதிகாரிகளை நீக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும், பல அதிரடி மாற்றங்களை கொண்டு வருவார்  என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் வசமாகும் நிலையில், தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் ட்விட்டர் நிறுவன ஊழியர்களின் கூட்டம் ஒன்றில் பேசியது தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, எலான் மஸ்க் தலைமையில் ட்விட்டர் நிறுவனத்தின் எதிர்காலம் நிச்சயமற்றதாக மாற வாய்ப்புள்ளதாகவும், நிறுவனம் கைமாறும் நிலையில், அது எந்த திசையில் செல்லும் என்று எங்களுக்கே தெரியாது என்று தெரிவித்திருந்தார். 

ஜேக் டோர்சியின் செயல்பாடுகள் முதலீட்டாளர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என உறுப்பினர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக கடந்த நவம்பர் மாதம் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து ஜாக் டோர்சி விலகியது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ட்விட்டர் நிறுவனத்தினை வாங்குவதற்காக முதலீடு செய்தவர்களிடத்தில் எலான் மஸ்க் பணியாளர்களை குறைப்பது குறித்து பேசியதாகக் கூறப்படுகிறது. அதில், தற்போது உள்ள 7500 பணியாளர்களில் 75 சதவிகிதத்தைக் குறைத்து குறைந்த அளவிலான பணியாளர்களை வைத்து நிறுவனத்தை நடத்த உள்ளதாக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com