ஏற்கெனவே இரண்டு முறை விண்ணில் ஏவப்படுவதிலிருந்து ஒத்திவைக்கப்பட்ட ஆர்டெமிஸ் விண்கலம் புயல் எச்சரிக்கை காரணமாக 3ஆவது முறையாகவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நிலவுக்கு மீண்டும் விண்வெளி வீரர்களை அனுப்பும் முயற்சியாக உருவாகியுள்ள ஆர்டெமிஸ் எனப் பெயரிடப்பட்ட திட்டத்தின் மூலம் நிலவுக்கு ராக்கெட் அனுப்பும் முயற்சியில் நாசா ஈடுபட்டு வருகிறது.
கடந்த 1969 ஆம் ஆண்டு முதல்முறையாக நிலவுக்கு விண்வெளி வீரர்களை அப்போலோ திட்டத்தின் மூலம் நாசா அனுப்பியது. 2019-ஆம் ஆண்டு அதன் 50 ஆண்டுகள் நிறைவை ஒட்டி 'ஆர்டெமிஸ்' திட்டத்தை தொடங்கியது குறிப்பிட்டத்தக்கது.
இதையும் படிக்க | அக்.1 முதல் 5ஜி அலைக்கற்றை சேவை: பிரதமர் மோடி தொடக்கி வைக்கிறார்
இந்த பிரமாண்ட திட்டத்தின்படி ராக்கெட்டை ஆகஸ்ட் 29-ஆம் தேதி விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் எரிபொருள் நிரப்பும் போது கசிவு கண்டறியப்பட்டதால் கடைசி நேரத்தில் ஆர்டெமிஸ் ராக்கெட் திட்டத்தை நிறுத்தி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது முயற்சியும் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது மூன்றாவது முறையும் ராக்கெட் ஏவுதல் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 27ஆம் தேதி விண்ணில் ஏவத் தயாராக இருந்த ஆர்டெமிஸ் ராக்கெட்டானது தற்போது அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள புயல் காரணமாக விண்ணில் செலுத்தப்படுவதிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
எனினும் மீண்டும் ராக்கெட் ஏவப்படுவதற்கான தேதி குறித்த உறுதியான தகவல்களை நாசா தெரிவிக்கவில்லை. வானிலை சீராகும் நிலையில் அக்டோபர் 17ஆம் தேதி ஆர்டெமிஸ் ராக்கெட் ஏவப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.