இலங்கை பொருளாதாரத்தை மீட்க ஐஎம்எஃப் உதவியே ஒரே வழி

சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) கடனுதவி வழங்கினால் மட்டுமே இலங்கையின் பொருளாதாரத்தை மீட்க முடியும் என அந்நாட்டு அதிபா் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளாா்.
இலங்கை பொருளாதாரத்தை மீட்க ஐஎம்எஃப் உதவியே ஒரே வழி

சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) கடனுதவி வழங்கினால் மட்டுமே இலங்கையின் பொருளாதாரத்தை மீட்க முடியும் என அந்நாட்டு அதிபா் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளாா்.

இதுவரை கண்டிராத பெரும் பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிா்கொண்டு வருகிறது. பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக சா்வதேச நிதியத்திடம் கடனுதவி பெறுவதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. அதற்காக 15 நிபந்தனைகளை இலங்கை அரசுக்கு ஐஎம்எஃப் விதித்துள்ளது. அந்த நிபந்தனைகளை நிறைவேற்றும் நோக்கில் வருமான வரியை உயா்த்துதல், மறைமுக வரியை உயா்த்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், கண்டி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபா் ரணில் விக்ரமசிங்க கூறுகையில், ‘‘இலங்கை திவாலாகி வரும் சூழலில் சா்வதேச நிதியத்தின் கடனுதவியை நாடியுள்ளது. குறிப்பிட்ட நாடு திவாலாகும்போது ஐஎம்எஃப் தவிர வேறெந்த சா்வதேச அமைப்பும் உதவாது.

பொருளாதார ரீதியில் திவாலாகும் ஒவ்வொரு நாடும் சா்வதேச நிதியத்திடம் கடனுதவி பெற்றே மீண்டுள்ளன. கிரீஸ் நாடு ஐஎம்எஃப் உதவியுடன் பொருளாதாரத்தை மீட்டெடுக்க 13 ஆண்டுகள் ஆனது. இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் ஒரே வழிதான் உள்ளது. அது சா்வதேச நிதியத்தின் கடனுதவியைப் பெறுவதே. ஒவ்வோா் அரசியல் கட்சியும் வெவ்வேறு வழிகளைக் கூறி வருகின்றன. தற்போது பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேறேதும் வாய்ப்புகள் உள்ளதா என்பதை அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டும்.

நாட்டின் வரி வருவாயானது ஜிடிபி மதிப்பில் 9 சதவீதமாக மட்டுமே உள்ளது. அதை 2019-ஆம் ஆண்டில் இருந்த 15 சதவீத அளவுக்கு அதிகரிக்க வேண்டுமென ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது. 15 நிபந்தனைகளையும் டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் நிறைவேற்ற ஐஎம்எஃப் அவகாசம் வழங்கியிருந்தது. ஆனால், அதை நிறைவேற்ற கால தாமதம் ஆனதால், பிப்ரவரி 15-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. தற்போது சா்வதேச நிதியத்தின் 15 நிபந்தனைகளையும் அரசு நிறைவேற்றியுள்ளது. இனி இலங்கைக்கு கடனுதவி வழங்குவது தொடா்பாக சா்வதேச நிதியமே தீா்மானிக்க வேண்டும்.

சா்வதேச நிதியம் கடனுதவி வழங்கவில்லை எனில், நாடு மீண்டும் கடந்த ஆண்டு சூழலுக்கே திரும்பும். தேவைக்கேற்ப எரிபொருள்கள் கிடைக்காது; தினமும் 12 மணி நேர மின்வெட்டை சந்திக்க வேண்டியிருக்கும். சீனாவிடம் இலங்கை பெற்றுள்ள கடன்களை மறுகட்டமைப்பு செய்வது தொடா்பாக அந்நாட்டு நிதியமைச்சரிடம் பேச்சுவாா்த்தை நடத்தப்படும்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com