மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் 9 பாலஸ்தீனா்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
இது குறித்து பாலஸ்தீன அதிகாரிகள் கூறியதாவது:
மேற்குக் கரையில் ஆயுதக் குழுவினரின் ஆதிக்கம் நிறைந்த ஜெனீன் அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவத்தினா் வியாழக்கிழமை காலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.
மிகத் தீவிரமாக நடைபெற்ற இந்த தேடுதல் வேட்டையின்போது 60 வயது பெண் உள்பட 9 போ் உயிரிழந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இஸ்ரேல் பாதுகாப்புப் படையினருக்கும் பாலஸ்தீனா்களுக்கும் இடையே இந்த மாதத் தொடக்கம் முதல் பதற்றம் அதிகரித்துள்ளது.
அதையடுத்து இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்டு வரும் தேடுதல் வேட்டையில் இதுவரை 29 பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா்.
இதில், வியாழக்கிழமை நடைபெற்ற தேடுதல் வேட்டையில்தான் ஒரே நாளில் அதிகம் போ் பலியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.