அமெரிக்காவில் லாட்டரி சீட்டு வாங்கியவருக்கு 1.73 பில்லியன் டாலர் பரிசுத்தொகை கிடைத்துள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 7,500 கோடியாகும்.
அமெரிக்க வரலாற்றில் லாட்டரியில் கிடைத்த தொகையில் இரண்டாவது மிகப்பெரிய தொகை இதுவாகும். இதற்கு முன்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஒருவருக்கு 2.04 பில்லியன் பரிசுத்தொகை விழுந்தது.
அமெரிக்காவில் 45 நகரங்களில் பவர்பால் ஜாக்பாட் எனும் லாட்டரிச்சீட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த டிக்கெட்டின் விலை 2 டாலர்கள். ஒரு சுழற்சியில் 250 மில்லியனுக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
கலிஃபோர்னியாவில் நடுத்தரக் குடும்பம் நடத்திவரும் மதுபானக் கடையில் பரிசுத்தொகை விழுந்த லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது. உள்ளூரைச் சேர்ந்தவர்களே அதிகம் டிக்கெட் வாங்குவதால், கலிஃபோர்னியாவைச் சேர்ந்தவருக்கே 1.73 பில்லியன் டாலர் பரிசுத்தொகை விழுந்துள்ளது. பவர்பால் லாட்டரியில் வெற்றிபெற்ற எண்கள் வெளியிடப்பட்டு (22, 24, 40, 52, 64) பரிசுத்தொகை பெற்றவர் பெயர் அறிவிக்கப்பட்டது.
வெற்றியாளர் இந்த தொகையை ஆண்டுக்கு 643.7 மில்லியன் என 30 ஆண்டுகளுக்கு பெற்றுக்கொள்ளலாம் அல்லது வரிப்பிடித்தம் போக மீதத்தொகையை மொத்தமாகவும் பெற்றுக்கொள்ளலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசுத்தொகை விழுந்த லாட்டரி சீட்டை விற்பனை செய்த ஃப்ராசேர் பார்க் பகுதியிலுள்ள மதுபானக் கடைக்கு 1 மில்லியன் ஊக்கத்தொகை பரிசளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சூதாட்டம் அல்லது லாட்டரி மூலம் கிடைக்கும் பரிசுத்தொகைக்கு வரி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் மாகாணங்களும் தனி வரிப்பிடிப்பு (2.5% முதல் 10.9% வரை) செய்கின்றன.
பொதுமக்களின் கல்விக்காக லாட்டரியில் மட்டும் கடந்த ஜூலை மாதம் முதல் 100 மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கலிஃபோர்னிய மாகாண லாட்டரி விற்பனை அமைப்பு குறிப்பிடுகிறது.
கடந்த ஆண்டு நவம்பரில் 2.04 பில்லியன் பரிசுத்தொகை விழுந்த நிலையில், இந்த ஆண்டு அக்டோபரில் 1.73 பில்லியன் பரிசுத்தொகை விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.