அமெரிக்க உளவுத்துறையின் தலைவர் பிரிட்டன் சென்று இஸ்ரேல் மற்றும் கத்தார் அதிகாரிகளைச் சந்தித்து போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஹமாஸுக்கு எதிரான போர் நடவடிக்கைகளின் தீவிரத்தைக் குறைக்குமாறு அமெரிக்க பாதுகாப்பு செயலர் வலியுறுத்தியுள்ளார்.
போர் தொடங்கி இரண்டு மாதங்கள் கடந்திருக்கும் நிலையில் போரின் தீவிரம் குறையவில்லை. வடக்குக் காஸாவில், தரைமட்டமாக்கப்பட்ட குடியிருப்புகள் மத்தியில் உயிரிழந்தவர்களை மட்டுமில்லாமல் உயிரோடு சிக்கியவர்களையும் மீட்கக் காஸாவின் பணியாளர்கள் போராடி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஹமாஸ் பிணைக்கைதிகளாக கடத்தி சென்ற 240 பேரில் இடையில் நடந்த போர் நிறுத்தத்தின்போது 110 பேர் விடுவிக்கப்பட்டனர். மீதமிருப்பவர்களை விடுவிக்க போர் நிறுத்தம் ஒரு வாய்ப்பாக அமையும் என அமெரிக்கா கருதுகிறது.
உலகளவில் போர் நிறுத்தத்துக்கான அழுத்தம் இஸ்ரேலுக்குக் கொடுக்கப்பட்டு வருகிறது. அமெரிக்கா, பொதுமக்கள் கணிசமாக பலியாவது குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியபோதும் ஐ.நாவில் அரபு நாடுகள் முன்னெடுத்த காஸாவுக்குத் தடையின்றி வாழ்வாதார பொருள்கள் செல்வதற்கான அனுமதி கோரிய தீர்மானம் அமெரிக்காவால் இன்னும் வாக்களிக்கப்படாமல் கிடப்பில் உள்ளது.
இதையும் படிக்க: சீனாவில் நிலநடுக்கம், 116 பேர் பலி!
இதுவரை 19 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் போரில் பலியாகியுள்ளனர். 19 லட்சம் பாலஸ்தீனர்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி ஐ.நா முகாம்களிலும் தெற்கு காஸாவில் உள்ள தற்காலிக முகாம்களிலும் தங்கியுள்ளனர்.