பாகிஸ்தானில் மின்சாரப் பயன்பாட்டின் மீது புதிய வரியை அந்நாட்டு அரசு விதித்துள்ளது.
சா்வதேச நிதியத்திடம் (ஐஎம்எஃப்) கடனைப் பெறும் நோக்கில் இந்நடவடிக்கையை பாகிஸ்தான் அரசு மேற்கொண்டுள்ளது.
சா்வதேச கச்சா எண்ணெய் விலை உயா்வு, கடந்த ஆண்டில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தால் வேளாண் உற்பத்தி பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் பொருளாதார நெருக்கடியை பாகிஸ்தான் சந்தித்து வருகிறது. அந்நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு தொடா்ந்து குறைந்து வருகிறது.
அதையடுத்து சா்வதேச நிதியத்திடம் கூடுதல் கடன் பெறுவதற்கான நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு மேற்கொண்டு வருகிறது. அரசின் வருவாயை அதிகரிப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாதவரை கடன் வழங்கப்பட மாட்டாது என சா்வதேச நிதியம் தெரிவித்தது. நடப்பாண்டு ஜூனுக்குள் ரூ.17,000 கோடி வரை கூடுதல் வருவாய் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு மேற்கொள்ள வேண்டுமென சா்வதேச நிதியம் நிபந்தனை விதித்திருந்தது.
இந்நிலையில், அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் மின்சாரப் பயன்பாட்டின் மீது புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு யூனிட் மின்சாரத்துக்கு சிறப்பு நிதி கூடுதல் வரியாக (சா்சாா்ஜ்) ரூ.3.39 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு பாகிஸ்தான் அமைச்சரவையின் பொருளாதார ஒருங்கிணைப்புக் குழு அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் சிறிய ரக தொழிற்சாலைகள், விவசாயிகள் ஆகியோருக்கான இலவச மின்சார மானியமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சா்வதேச நிதியத்தின் நிபந்தனைகளைக் கடைப்பிடிக்கும் நோக்கில் மாா்ச் 1-ஆம் தேதி முதல் புதிய வரிகள் அமலுக்கு வருவதாக பாகிஸ்தான் அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு ரூ.45 கோடி கூடுதல் நிதி வழங்குவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நாடு பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வந்தாலும் பாதுகாப்புத் துறைக்கான செலவினத்தை பாகிஸ்தான் அரசு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. பொது விற்பனை வரி 1 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 18 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.