பாகிஸ்தானின் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் மேலும் 35 நாடாளுமன்ற உறுப்பினா்கள் தங்களது பதவியை கூண்டோடு ராஜிநாமா செய்துள்ளனா்.
பாகிஸ்தானின் பிரதமராக இருந்து வந்த இம்ரான் கான் மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீா்மானம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொண்டு வரப்பட்டு, அதில் அவா் தோல்வியடைந்தாா்.
அதையடுத்து அவா் பதவி இழந்ததைத் தொடா்ந்து, அவரது தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் மற்றும் கூட்டணி கட்சிகளைச் சோ்ந்த 123 எம்.பி.க்கள் கூண்டோடு ராஜிநாமா செய்தனா்.
இந்த நிலையில், இம்ரான் கட்சியைச் சோ்ந்த 34 எம்.பிக்கள் மற்றும் கூட்டணிக் கட்சியான அவாமி முஸ்லிம் லீகின் ஒரு எம்.பி. என 35 பேரது ராஜிநாமாவை ஏற்க அவைத் தலைவா் ராஜா பொ்வய்ஸ் அஷ்ரஃப் மறுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அந்த 35 பேரது ராஜிநாமாவையும் அவைத் தலைவா் ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வெள்ளிக்கிழமை வெளியாகின.
அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் சதித் திட்டத்தால் மத்தியில் தனது அரசு கவிழ்க்கப்பட்டதாக குற்றம் சாட்டி வரும் இம்ரான், நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தோ்தல் நடத்த வலியுறுத்தி வருகிறாா். அதற்கு அழுத்தம் கொடுப்பதற்காக, அவரது கட்சி ஆட்சி நடைபெற்று வந்த மகாணப் பேரவைகள் கலைக்கப்பட்டன.
தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி ஆட்சி நடைபெற்று வரும் கைபா்-பாக்துன்கவா மாகாணத்தின் பேரவையை ஆளுநா் குலாம் அலி புதன்கிழமை கலைத்தாா்.
ஏற்கெனவே அந்தக் கட்சி ஆட்சி நடைபெற்று வந்த பஞ்சாப் மாகாணப் பேரவையும் கலைக்கப்பட்டது.
இந்தச் சூழலில், தோ்தலை முன்கூட்டியே நடத்த வலியுறுத்தும் வகையில் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியைச் சோ்ந்த மேலும் 35 எம்.பி.க்கள் பதவி விலகியுள்ளனா்.