லண்டன்: லண்டனில் நடைபெறும் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமையல் ராணி மஞ்சு மல்ஹி பங்கேற்றுள்ளார்.
பிரிட்டன் இரண்டாம் எலிசபெத் மறைவைத் தொடா்ந்து மூத்த மகன் சாா்லஸ் கடந்த நவம்பரில் அரியணையேறினாா். அவரது முடிசூட்டு விழா சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முடிசூட்டு விழாவில் பங்கேற்பதற்காக உலக தலைவர் லண்டனில் முகாமிட்டுள்ளனர். இந்த விழாவில் இந்திய வம்சாவளி சமையல் ராணி மஞ்சு மல்ஹியும் பங்கேற்றுள்ளார்.
இந்த விழாவைக் காண ஒட்டுமொத்த பிரிட்டனும் தயாராகி உள்ளது. சார்லஸை அழைத்துச் செல்வதற்காக பாரம்பரியமிக்க சாரட் வண்டி மீண்டும் புதுபிக்கப்பட்டு புத்துயிர் பெற்றுள்ளது.
இந்த விழாவில் பிரிட்டன் மன்னர்கள் பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த 700 ஆண்டுகள் பழமையான தங்க முலாம் பூசப்பட்ட சிம்மாசனம் தயாராகியுள்ளது.
மறைந்த பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது முடிசூட்டு நிகழ்ச்சியில் அணிந்த அதே எட்வர்ட் மகுடத்தை சார்லஸ் தலையில் அணிந்து முடிசூடிக்கொண்டவுடன், அவரது மனைவி கமீலா பிரிட்டன் ராணியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளார்.
சார்லஸ் முடிசூடும் நிகழ்ச்சியை முன்னிட்டு, லண்டன் நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது.
இந்தியா சார்பில் குடியரசுத் துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்றுள்ளார்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உலக நாடுகளின் தலைவர்கள், பிரிட்டனில் உள்ள தொண்டு நிறுவனங்கள், சமூக குழுக்களைச் சேர்ந்தவர்கள் என சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.
அதன்படி, பிரிட்டன் பேரரசு பதக்கம் பெற்ற 850 தன்னார்வலர்கள் விழாவில் பங்கேற்றுள்ளனர். அவர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமையல் ராணி மஞ்சு மல்ஹியும் பங்கேற்றுள்ளார்.
கரோனா தொற்று காலத்தில் லண்டனில் சமூகத்திற்கு இவரது சிறப்பான சேவையை பாராட்டி சார்லஸின் தாயார் மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்திடம் பிரிட்டன் பேரரசு பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராயல் ஃபேமிலி யூடியூப் சேனல் விழாவை நேரடியாக ஒளிபரப்புகிறது.