ஹமாஸ் தலைவர் யெஹ்யா சின்வரைக் கொல்வதில் இஸ்ரேல் உறுதி!
ஹமாஸ் தலைவர் யெஹ்யா சின்வரைத் தேடிக் கொல்வதில் இஸ்ரேல் அரசு உறுதியாகவுள்ளது.
கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேலுக்குள் ஊடுருவி ராணுவ வீரர்கள், பொதுமக்கள் மீது ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்திய தாக்குதலில் 1,400-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். பலரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் படையினர் பிடித்துச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஸா மீது ஒரு மாதமாக இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
வான்வழித் தாக்குதலை தொடர்ந்து தரை வழியாகவும் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் படையினர் ஹமாஸ் தலைவர்கள் பதுங்கி இருக்கும் இடங்களில் குண்டு மழை பொழிந்து வருகின்றனர்.
இந்த தாக்குதலில் காஸாவிலுள்ள பொதுமக்கள் 10,000-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இருப்பினும், ஹமாஸ் படையை முழுமையாக அளிக்கும்வரை போர் நிறுத்தப்படாது என்று இஸ்ரேல் அரசு சூளுரைத்துள்ளது.
அக்டோபர் 7 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸின் முக்கியத் தலைவர் யெஹ்யா சின்வரைத் தேடிக் கொல்வோம் என்று இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலண்ட் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுவரை ஹமாஸின் 12 படைத் தளபதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், அனைத்து பயங்கரவாதிகளையும் அழிப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், யெஹ்யா சின்வர் குறித்து ஞாயிற்றுக்கிழமை பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “பதுங்கு குழியில் இருக்கும் சிறிய ஹிட்லருக்கு தனது மக்கள் மீது அக்கறை இல்லை” என்று விமர்சித்துள்ளார்.
இதையும் படிக்க | காஸாவின் பின்லேடன்? யார் இந்த யாஹ்யா சின்வார்?
1988-ல் இரு இஸ்ரேலிய ராணுவத்தினரைக் கொன்றதற்காகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் சின்வர். பின்னர், 2006-ல் ஹமாஸ் படையால் கடத்திச் செல்லப்பட்ட இஸ்ரேல் வீரர்களை மீட்க, சின்வரை விடுதலை செய்தது இஸ்ரேல்.
2017 முதல் ஹமாஸின் தலைமை பொறுப்பில் இருக்கும் சின்வார், அமெரிக்காவின் தேடப்படும் சர்வதேச குற்றவாளிகளின் பட்டியலில் உள்ளார்.