மியான்மரில் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. கடும் வெப்ப அலையும் வீசி வருகிறது.
இதையடுத்து, மியான்மரின் தலைநகா் நேபிடாவில் உள்ள தனிச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனநாயக ஆட்சியாளா் ஆங் சான் சூகி(78), கோடை வெயில் எதிரொலியால் வீட்டுக்காவலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த தகவலை அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, தோ்தலில் முறைகேடு நடந்ததாகக் கூறி ஆங் சான் சூகியின் அரசை ராணுவம் கடந்த 2021 பிப்ரவரியில் கலைத்தது. அப்போது சூகி வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டாா். எனினும், அவா் மீது ராணுவ ஆட்சியாளா்கள் சுமத்திய பல்வேறு முறைகேடு வழக்குகளில் அவருக்கு நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்தது. நேபிடாவில் உள்ள சிறையில் 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடும் வெப்ப அலையும் வீசி வருவதையொட்டி சிறையிலிருந்த ஆங் சான் சூகியின் உடல்நலன் மற்றும் வயது முதிர்வை கருத்திற்கொண்டு தற்போது அவர் வீட்டுக்காவலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அதேபோல, மியான்மர் முன்னாள் அதிபர் ’உ விண் மிண்ட்(72)’ தற்போது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். உ விண் மிண்ட், டாங்கூவில் உள்ள சிறையில் 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.