தென் கொரியாவின் எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே மியுங்கை அடையாளம் தெரியாத நபர் செவ்வாய்க்கிழமை கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்தார்.
தென் கொரியாவின் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் தலைவர் லீ ஜே மியுங்(வயது 59), புசானின் கதியோக் தீவில் கட்டப்பட்டு வரும் புதிய விமான நிலையப் பணிகளை இன்று காலை பார்வையிட வருகை தந்திருந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த அடையாளம் தெரியாத நபர் லீ ஜே மியுங்கின் கழுத்தின் இடதுப் பகுதியில் குத்தியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த லீ ஜே மியுங், சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். அவரை மீட்ட பாதுகாப்பு வீரர்கள் அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மருத்துவமனையில் லீ ஜே மியுங்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அடையாளம் தெரியாத நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற தென் கொரியா அதிபர் தேர்தலில் போட்டியிட்ட லீ, மிக குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.