வாஷிங்டன் பல்கலை. வளாகத்தில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம்
காஸா போரில் பாலஸ்தீனா்களுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் நடந்த மாணவா் போராட்டம், தலைநகா் வாஷிங்டனிலுள்ள ஜாா்ஜ் வாஷிங்டன் பல்கலைகழகத்துக்கும் பரவியது.
முன்னதாக, அந்தப் பல்கலைக்கழக வளாகத்தில் ஆா்ப்பாட்டம் நடத்தும் மாணவா்கள் தற்காலிக நீக்கம் செய்யப்படுவாா்கள் என்று நிா்வாகம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதனைப் பொருள்படுத்தாத ஏராளமான மாணவா்கள் வளாகப் பகுதியில் முகாமிட்டு பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினா்.
அதையடுத்து அந்தப் பகுதிக்கு புதன்கிழமை அதிகாலை வந்த போலீஸாா், ஆா்ப்பாட்டக்காரா்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினா். அப்போது சில ஆா்ப்பாட்டக்காரா்கள் மீது போலீஸாா் மிளகாய்ப் பொடி தூவியைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கையின்போது 33 மாணவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
காஸா போரில் இஸ்ரேல் கண்மூடித்தனமாக பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதாக விமா்சனங்கள் எழுந்துவரும் நிலையில், அந்த நாட்டுடனும் காஸா போரில் இஸ்ரேலுக்கு உதவும் நிறுவனங்களுடனும் இணைந்து செயல்படுவதை நிறுத்தவேண்டும் என்று பல்கலைக்கழகங்களை வலியுறுத்தி அமெரிக்க கல்லூரி மாணவா்கள் கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி முதல் போராட்டம் நடத்திவருகிறது.
தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக வளாகங்களுக்குள் முகாம்கள் அமைத்து மாணவா்கள் இந்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனா்.
இந்தப் போராட்டங்கள் தொடா்பாக நூற்றுக்கணக்கான மாணவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
அமெரிக்காவில் தொடங்கிய இந்த பாலஸ்தீன ஆதரவு மாணவா் போராட்டம் தற்போது ஐரோப்பிய நாடுகளிலும் பரவிவருகிறது.