வெள்ளைக் கொடி காட்டியபடி நடந்து வந்த பாலஸ்தீனர்களை ராணுவத்தினர் தாக்கிய விவகாரத்தில் இஸ்ரேல் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளது.
காஸாவின் இரண்டாவது பெரிய நகரமான கான் யூனிஸில் இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்துவருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் அந்த பகுதியில் இருந்து ராபா எல்லை நோக்கி இடம்பெயர்ந்துவருகின்றனர்.
இந்த நிலையில், தெற்கு கான் யூனிஸ் பகுதியில் நான்கைந்து பேர் வெள்ளை கொடியுடன் சாலையில் நடந்து சென்றபோது இஸ்ரேல் ராணுவ வாகனம் தாக்கிய விடியோ பன்னாட்டு செய்தி நிறுவனங்களில் வெளியாகியது.
கான் யூனிஸ் பகுதியில் இருந்த வெளியேற்றப்பட்ட மக்களில் சிலரை ராணுவம் தடுத்து வைத்ததாகவும் அதில் தனது சகோதரர் இருந்ததாகவும் அவரை மீட்கச் செல்வதாகவும் அந்த விடியோவில் 51 வயதான ராம்ஸி அபு சலூல் தெரிவித்துள்ளார்.
அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியதில் ராம்ஸி உயிரிழந்தார்.
அவரை உடன் இருக்கும் மற்றவர்கள் இழுத்து செல்லும் காட்சிகள் அந்த காணொலியில் இடம்பெற்றுள்ளன. இதனை படமாக்கிய செய்தியாளர் அருகில் செல்ல முயன்றபோதும் தாக்குதல் தொடர்ச்சியாக நடத்தப்பட்டுள்ளதை அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ஜோா்டானில் தாக்குதல்: 3 அமெரிக்க வீரா்கள் உயிரிழப்பு
பன்னாட்டளவில் சரணடைவதற்கான குறியீடான வெள்ளை கொடியசைத்த போதும் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை குறித்து இஸ்ரேல் விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.