திருச்சி: காய்ச்சல் காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அரசு மருத்துவருக்கு கரோனோ தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருச்சி அரசு மருத்துவமனையில் கரோனோ தடுப்பு சிகிச்சைக்காக 75 படுக்கைகளுடன் கூடிய தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு, கரோனோ தொற்றுள்ள ஈரோட்டைச் சேர்ந்த இளைஞர் மற்றும் 4 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இதே மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த பல் மருத்துவர் ஒருவர் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அவருக்கு கரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் அவரது உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பரிசோதனை முடிவில் தொற்று இல்லை என்பது உறுதி செய்ப்பட்டுள்ளது.
இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனை வட்டாரங்கள் நிம்மதியடைந்துள்ளன. அரசு மருத்துவர் ஒருவருக்கே தொற்று இருப்பதாக பரவிய வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.