இந்தியாவின் அடையாளங்களை மீட்பது அவசியம் என்றார் மத்திய கலாசார, சுற்றுலாத் துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா.
பெங்களூரில் வெள்ளிக்கிழமை அரிமா சங்கத்தின் சர்வதேச தலைவராக நரேஷ் அகர்வால் தேர்வு செய்யப்பட்டதை வரவேற்று நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியது:
இந்தியாவின் பெருமைக்கு அடையாளமாக மகாத்மா காந்தி, அண்ணல் அம்பேத்கர் போன்றவர்கள் திகழ்கின்றனர். அந்த வரிசையில் பெருமைமிகு அடையாளமாகத் திகழ்வது அரிமா சங்கம். இந்த சங்கத்தின் சர்வதேச தலைவராக நரேஷ் அகர்வால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
அரிமா சங்கம் சார்பில் நடத்தப்படும் சுதந்திர தின விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அனைத்து உதவிகளையும் வழங்குவார். மறைந்து வரும் இந்தியாவின் அடையாளங்களைப் பாதுகாத்து அவற்றை மீட்பது அவசியம் என்றார்.
நிகழ்ச்சியில் அரிமா சங்கத்தின் 101-ஆவது சர்வதேச தலைவர் நரேஷ் அகர்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.