பெங்களூரு அல்சூர் சோமேஸ்வரா கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, கிழக்கு மண்டலத்தில் உள்ள அல்சூர், இந்திராநகர் காவல் சரகங்களில் மது விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெங்களூரு மாநகரக் காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு அல்சூர் சோமேஸ்வரா கோயில் தேரோட்டம் சனிக்கிழமை (ஏப்.22) நடைபெறுகிறது. இதில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விழாவில் சில சமூக விரோதிகள் பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சி மேற்கொள்ளலாம். இதனால், ஏப். 22-ஆம் தேதி காலை 6 மணி முதல் 23-ஆம் தேதி மாலை 5 மணி வரை பெங்களூரு கிழக்கு மண்டலத்தில் உள்ள அல்சூர், இந்திராநகர் காவல் சரகங்களில் மது விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.