தசரா திருவிழாவில் பங்கேற்பதற்காக நாகரஹொளே காட்டிலிருந்து மைசூருக்கு வந்த யானைப் படைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
உலகப் புகழ் பெற்ற தசரா திருவிழா 405-ஆம் ஆண்டாக செப்.21 முதல் 30-ஆம் தேதி வரை மைசூரில் கோலாகலமாக நடைபெறுகிறது. தசரா விழாவின் இறுதிநாளான செப்.30-ஆம் தேதி மனதை மயக்கும் யானை ஊர்வலம் இடம் பெறுகிறது. யானை அர்ஜுனா , 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமந்து கொண்டு ஊர்வலத்தை வழிநடத்தி செல்லும். அதை பின்தொடர்ந்து பல யானைகள் ஊர்வலத்தில் பங்கேற்கும். இதை காண உலகத்தின் பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் இவ் விழாவுக்கு வருகின்றனர்.
தசரா திருவிழாவில் பங்கேற்கும் யானைகள் அர்ஜுனா, பலராமா, அபிமன்யூ, கஜேந்திரா, காவிரி, விஜயா, முதல்முறையாக கலந்து கொள்ளும் வரலட்சுமி, பீமா ஆகிய 8 யானைகள் ஆக.12-ஆம் தேதி மைசூரு மாவட்டம், ஹுனசூர் வட்டம், நாகரஹொளே புலிகள் சரணாலயத்தில் இருந்து மைசூருக்கு வந்த 8 யானைகளும் வியாழக்கிழமை மைசூரில் உள்ள வனத் துறை அலுவலக வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டன.
அங்கு வழக்கமான உற்சாகத்தோடு யானைகளுக்கு உற்சாக வரவேற்புஅளிக்கப்பட்டது. அதேபோல, மைசூரில் உள்ள அரண்மனைக்கு முறைப்படி யானைகளை அழைத்து வருவது சம்பிரதாயம். அதன்படி, யானைப் படையை வியாழக்கிழமை அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டன.
அழகிய, வண்ண ஆடைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த யானைப் படைக்கு பொதுப் பணித் துறை அமைச்சர் எச்.சி.மகாதேவப்பா தலைமையில் பூரணகும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. யானைப் படைக்கு அமைச்சர் மகாதேவப்பா, பாரம்பரிய முறையில் சிறப்பு பூஜை செய்து கரும்பு, வெல்லம், தேங்காய் உள்ளிட்டதின்பண்டங்களை கொடுத்தார்.
பின்னர், யானைகள் அரண்மனை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டன. ஒருமாத காலம் அங்கு தங்கியிருக்கும் யானைகளுக்கு அதன் பாகன்கள் பயிற்சி அளித்து பராமரிப்பார்கள். இந்த விழாவை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளித்ததோடு, படமெடுத்து கொண்டனர்.