கனரக வாகனங்களை ஓட்டுவதற்கு பெண்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எச்.எம்.ரேவண்ணா தெரிவித்தார்.
பெங்களூரு எலஹங்கா ஒன்றியம், சிங்கநாயகனஹள்ளியில் வியாழக்கிழமை மண்டல போக்குவரத்து அலுவலக கட்டட திறப்பு விழாவில் அவர் பேசியது:
பெண்கள் காவல் துறை உள்பட பல்வேறு துறைகளில் தங்கள் திறமைகளை ஆண்களுக்கு நிகராக காட்டி வருகின்றனர். போக்குவரத்து துறையிலும் கனரக வாகனங்களை ஓட்டுவதற்கு பெண்களுக்கு பயிற்சி அளித்து, ஓட்டுநர்களாகப் பணியில் அமர்த்தத் திட்டமிட்டுள்ளோம்.
தேசிய அளவில் சாலை பாதுகாப்பில் கர்நாடகம் 4-ஆவது இடத்தில் உள்ளது. சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளிப்பது அவசியம். மாநில அளவில் 63 மண்டல அலுவலகங்கள் உள்ளன. இதில் 40 அலுவலகங்கள் சொந்த கட்டடங்களில் இயங்கி வருகின்றன.
பெங்களூரில் 11 மண்டல அலுவலகங்களில், 5 அலுவலகங்கள் சொந்த கட்டடங்களில் இயங்கி வருகின்றன. இதில் தற்போது எலஹங்கா ஒன்றியம் சிங்கநாயகனஹள்ளி அலுவலகமும் சேர்ந்துள்ளது. மாநில அளவில் 5 லட்சம் டிராக்டர்கள் உள்ளன.
இதனை இயக்குவதற்கு 2 லட்சம் பேர் உரிமம் பெற்றுள்ளனர். விவசாயி சாரதி திட்டத்தில் உரிமம் பெறாத அனைவருக்கும் பயிற்சி அளித்து உரிமம் வழங்கப்படும். மாசு அதிகரித்துவருவதில் தில்லியைத் தொடர்ந்து கர்நாடகம் 2-ஆவது இடத்தில் உள்ளது. எனவே, விரைவில் மாதத்தின் 2-ஆவது வார ஞாயிற்றுக்கிழமையை போக்குவரத்து இல்லா தினமாக கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளோம். இதற்கு பொதுமக்களும், போக்குவரத்தில் தொடர்புடைய சங்கங்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் விஸ்வநாத், மேலவை உறுப்பினர் நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.