சொத்துத் தகராறில் பெண் உள்பட 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
கலபுர்கி மாவட்டத்துக்குள்பட்ட சேடம் அருகேயுள்ள மூகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராயா (57). இவரது மனைவி காளம்மா (50). இவர்களது உறவினர் ராஜசேகர் (19). இவர்கள் மூவரும் தங்களது உறவினர்களான ஜெகதேவி பசவராஜ், அடப்பா தேவராயா, பீமராய பசவராஜ் உள்ளிட்டோருடன் ஞாயிற்றுக்கிழமை நிலத்தில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இவர்களை அங்கு வந்த சந்திரகாந்த் குத்தேதார் தலைமையிலான கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டினராம். இதில் பலத்த காயமடைந்த தேவராயா, காளம்மா, ராஜசேகர் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
பலத்த காயமடைந்த ஜெகதேவி பசவராஜ், அடப்பா தேவராயா, பீமராய பசவராஜ் ஆகியோர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சொத்து பிரச்னைக்காக இந்தக் கொலைகள் நிகழ்ந்திருக்கலாம் என சேடம் போலீஸார் சந்தேகித்து, விசாரணை நடத்திவருகின்றனர்.