பெங்களூரில் உள்ள மத்திய சிறையில் பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக டிஐஜி ரூபா, தன்மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கு 3 நாள்களுக்குள் மன்னிப்புக் கோராவிடில், மானநஷ்ட வழக்குத் தொடுக்கவுள்ளதாக டிஐஜி எச்.என்.சத்தியநாராயண ராவ் வழக்குரைஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் சட்ட முறைகேடுகள் நடப்பதாகவும், சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்று சிறையில் உள்ள சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்துதர டிஜிபி எச்.என்.சத்தியநாராயணா ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுள்ளதாகவும் காவல் துறை உயரதிகாரிகளுக்கு சிறைத் துறை முன்னாள் டிஐஜி டி.ரூபா இரண்டு அறிக்கைகள் அளித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, சிறைத் துறை டிஐஜி பொறுப்பில் இருந்து டி.ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டார். டிஜிபி எச்.என்.சத்தியநாராயண ராவ் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். மேலும், சிறைத் துறையில் முக்கியப் பொறுப்புகள் வகித்த அதிகாரிகள் பலரும் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் குழு அமைத்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு மூத்த வழக்குரைஞர் ரமேஷ் புதிகே மூலம் டிஐஜி டி.ரூபாவுக்கு சிறைத் துறை டிஜிபி எச்.என்.சத்தியநாராயண ராவ் புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில் ரூ.50 கோடி நஷ்ட ஈடு கேட்டுள்ளதோடு, நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அடுத்த 3 நாள்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்காவிட்டால், டி.ரூபா மீது மானநஷ்ட வழக்குத் தொடரப் போவதாகவும் எச்.என்.சத்தியநாராயண ராவ் குறிப்பிட்டுள்ளார்.