அப்துல் கலாமின் வழிகாட்டுதலை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் ரமேஷ் குமார் தெரிவித்தார்.
பெங்களூரு ரேவா பல்கலைக்கழகத்தில் சுகாதார மையம், விருந்தினர் மாளிகை ஆகியவற்றை திங்கள்கிழமை திறந்துவைத்து அவர் பேசியது:-
வாழ்க்கையை நெறிபடுத்துவதற்காக மாணவர்கள் கல்வியை கற்க வேண்டும். மனப்பாடம் செய்வதற்காக கல்வியை பயிலுவது எதிர்கால வாழ்க்கைக்கு உதவாது.
பெற்றோர்கள் தங்கள் ரத்தத்தைச் சிந்தி, தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கின்றனர். ஆனால் பெரும்பாலான மாணவர்கள் தங்கள் பொறுப்புகளை உணராமல், வழிதவறி வருவது வேதனை அளிக்கிறது.
உயர்கல்வியை படிப்பதால் மட்டுமே பொது அறிவு வளர்ந்துவிடாது. பெரும்பாலான மாணவர்களுக்கு வேலைவாய்ப்பின்போது நேர்முகத் தேர்வை சந்திக்க முடியாமல் திணறுகின்றனர். எனவே அதிகம் படித்தவர்கள் எல்லாம் புத்திசாலிகள் கிடையாது. படிக்காதவர்கள் எல்லாம் புத்தியில்லாதவர்களும் இல்லை.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் குக்கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்தார். ஆனால் சிறப்பாகக் கல்வி பயின்று பல்வேறு துறைகளின் பணியாற்றி, சாதனைகளை புரிந்தார்.
மக்களோடு மக்களாகப் பழகிய அவரை சிறுவர் முதல் முதியவர் வரை அனைவரும் விரும்பினர். நாட்டின் உச்ச பதவியான குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரித்தார். பின்னர் சாதாரண குடிமகனாக இறந்தார். அவர் இறந்தும் அவரது புகழ் இறக்காமல் உள்ளது. அவரது வாழ்க்கை வரலாற்றை மாணவர்கள் மறந்து விடக்கூடாது. புத்திசாலிகள் தன்னடக்கத்துடன் நடந்துகொள்வார்கள்.
அப்துல் கலாமின் வழிகாட்டுதலை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் ரேவா பல்கலைக்கழத்தின் வேந்தர் பி.ஷியாம்ராஜு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.