துப்புரவுத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.17 ஆயிரம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று பெங்களூரு வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் தெரிவித்தார்.
உலர்ந்த, ஈர குப்பைகளைக் கொட்டுவதற்கு, பெங்களூரு மாநகராட்சி சார்பில் காந்தி நகரில் 2 பிளாஸ்டிக் தொட்டிகளை திங்கள்கிழமை திறந்து வைத்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:-
உலக தரம்வாய்ந்த நகரமாக பெங்களூரு விளங்குகிறது. எனவே அதன் தூய்மையைப் பாதுகாப்பது நமது கடமை. தூய்மைக்கு துப்புரவுத் தொழிலாளர்களின் பங்களிப்பு அபாரமாகும். ஆனால் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு ஊதியமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து சமூக நலத் துறை அமைச்சர் எச்.ஆஞ்சநேயா, உள்ளாட்சித் துறை அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரேவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விரைவில் அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டு, குறைந்தபட்சம் ஊதியமாக ரூ.17 ஆயிரம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார்.
இதையடுத்து, மேயர் ஜி.பத்மாவதி கூறியது:-
நிகழாண்டு நகர வளர்ச்சித் திட்டத்தில் ரூ.4.15 கோடி திட்டத்தில் குப்பையை கொட்ட 2,232 பிளாஸ்டிக் தொட்டிகள் வாங்கப்பட்டுள்ளன.
இதனை குப்பை அதிக அளவில் சேரும் இடங்களில் ஜோடி தொட்டிகள் வைக்கப்படும். அதில் உலர்ந்த, ஈர குப்பைகளை வகைபிரித்துக் கொட்ட வேண்டும் என்றார்.
பேட்டியின்போது காந்தி நகர் எம்எல்ஏவும், காங்கிரஸ் மாநிலச் செயல் தலைவருமான தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.