விவசாயிகளை பாதுகாக்க கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாய சங்கத் தலைவரும், எம்எல்ஏவுமான புட்டண்ணையா தெரிவித்தார்.
கர்நாடக சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற விவாதத்தில், அவர் பேசியது:-
நாட்டின் உணவுப் பொருள்களை விளைவித்து வழங்குவதால், அரசு கருவூலத்துக்கு 78 சதவீதம் வருவாய் கிடைக்க வழி செய்யும் விவசாயி, தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது வேதனை அளிக்கிறது. விளைச்சலுக்கு உரிய விலை விவசாயிக்கு கிடைப்பதில்லை. உரிய விலை நிர்ணயம் செய்யும் பணியை எந்த அரசும் மேற்கொள்ளவில்லை. வேளாண் பொருள் விலை நிர்ணயம் செய்யும் ஆணையத்தை தொடங்கி 4 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இதுவரை அந்த ஆணையம் எந்த அறிக்கையையும் தாக்கல் செய்யவில்லை.
வேளாண் உற்பத்திக்கு எந்தக் கொள்கையும் வகுக்கவில்லை. எனவே தொடர்ந்து பாதிப்பிற்குள்ளாகி வரும் விவசாயிகள், விவசாயத்தைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். இதனால் கிராமங்கள் தொழில்நகரமாகி வருகின்றனர். இதனால் தேசிய அளவில் உணவுப் பாதுகாப்பு நலிந்து வருகின்றன.
விவசாயிகளைப் பாதுகாப்பதில் கட்சிப் பேதங்களை மறக்க வேண்டும். கடன் சுமையால் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து வருகிறது. விளைச்சலுக்கு உரிய விலை கிடைத்தால், யாருக்கும் கடன் சுமை இருக்காது. யாரும் தற்கொலை செய்துகொள்ள மாட்டார்கள். பசுவதை பற்றி பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார். ஆனால் விவசாயிகளைப் பாதுகாப்பது குறித்து பேச மறுக்கிறார். வறட்சியால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளின் கடன்களை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும். மறுத்தால், கடனை கட்ட மறுத்து சிறைக்குச் செல்லவும் தயாராக உள்ளோம் என்றார் அவர்.