பள்ளி மாணவர்களுக்கு கடிதம் எழுதும் போட்டியை நடத்த இந்திய பேனா நண்பர் பேரவை- கர்நாடக கிளை திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய பேனா நண்பர் பேரவை- கர்நாடக கிளையின் மாநில அமைப்பாளர் ஜே.ஜேசுதாஸ் வெளியிட்டுள்ள செய்தி: மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்திய பேனா நண்பர் பேரவைக்கு கர்நாடகம், தமிழகம், ஆந்திரம், கேரளம் உள்பட உலகின் பல நாடுகளில் கிளைகள் உள்ளன. சமூக அறக்கட்டளையாக பதிவுசெய்யப்பட்டு இந்த அமைப்பின் சார்பில், பல்வேறு சமூகப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஒருகாலத்தில் மிகச்சிறந்த தகவல்தொடர்பு ஊடகமாக விளங்கிய கடிதம், தற்போது அழிவின் விளிம்பில் உள்ளன. கடிதம் எழுதும் கலையை அழியவிடாமல் இருக்கும்பொருட்டு, அக்கலையை பள்ளி மாணவர்களிடம் இருந்து துளிர்க்கவும், வளர்க்கவும் முடிவுசெய்துள்ளோம்.
இதற்காக பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 10- ஆம் தேதி முதல் 30- ஆம் தேதிவரை கடிதம் எழுதும் போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த போட்டியை தங்கள் பள்ளியில் நடத்த விரும்பும் பள்ளி நிர்வாகங்களிடம் இருந்து விருப்பக் கடிதத்தை வரவேற்கிறோம்.
பள்ளி அளவில் நடத்தப்படும் கடிதம் எழுதும் போட்டியில், சிறந்த கடிதங்களை எழுதிய ஐந்து பேரை தேர்ந்தெடுத்து தலா ரூ.500 ரொக்கப் பரிசு, சான்றிதழ் அளிக்கப்படும். பள்ளி அளவில் வெற்றிபெறும் மாணவர்கள் பங்கேற்கும் மாநில அளவிலான கடிதம் எழுதும் போட்டி ஆகஸ்ட் மாதத்தில் பெங்களூரில் உள்ள பொது இடத்தில் நடத்தப்படும். இதில் சிறந்த மூன்று கடிதங்களை தேர்ந்தெடுத்து முதல்பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.4 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.3 ஆயிரம் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இப்போட்டிகளை பள்ளிகளில் நடத்த விரும்பும் அதன் நிர்வாகங்கள் விருப்பக் கடிதங்களை ஜே.ஜேசுதாஸ், மாநில அமைப்பாளர், இந்திய பேனா நண்பர் பேரவை- கர்நாடக கிளை, 88/89, காட்டன்பேட் முதன்மைச் சாலை, பெங்களூரு- 560053 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு 9743283977, 9886416955, 080- 26702808 என்ற தொலைபேசிகளை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.