கர்நாடகத்தில் புனித ரமலான் திருநாளை முஸ்லிம்கள் கொண்டாடினர்.
பெங்களூரு, மைசூரு, பெலகாவி, மங்களூரு, உடுப்பி, ஹுப்பள்ளி, சாமராஜ்நகர், சிவமொக்கா, பீதர், பெல்லாரி, சித்ரதுர்கா, கோலார் உள்ளிட்ட பகுதிகளில் ரமலான் திருநாளை முஸ்லிம்கள் திங்கள்கிழமை கொண்டாடி மகிழ்ந்தனர்.
பெங்களூரில் சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானம், குத்தூஸ் ஷா மைதானம், பன்னரகட்டா, சிவாஜிநகர், மைசூரு சாலை, கோரிபாளையா, மாகடிசாலை, கோபாலபுரம், டானரிசாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புனித ரமலான் சிறப்புத் தொழுகைகள் நடந்தன. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
நாகவரா பகுதியில் உள்ள அரபிக் கல்லூரி சாலையில் நடந்த சிறப்புத் தொழுகையில் கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜி.பரமேஸ்வர் உள்ளிட்டமுக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
இதையொட்டி, இனிப்புகள், அசைவ உணவுகளை முஸ்லிம்கள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்திருந்தனர்.
இதனால் எந்தவித அசம்பாவிதச் சம்பவங்களும் நடைபெறவில்லை.