பெங்களூரு மாநகராட்சியில் சொத்து வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகாரின் அடிப்படையில் முதல்கட்டமாக 4 மண்டலங்களில் ஆய்வு செய்யப்படும் என்று மாநகராட்சி வரி மற்றும் நிதிநிலைக் குழுத் தலைவர் எம்.கே.குணசேகரன் தெரிவித்தார்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
பெங்களூரு மாநகராட்சியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வணிகவளாகங்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து முதல்கட்டமாக மாநகராட்சி தெற்கு, எலஹங்கா, பொம்மனஹள்ளி, மேற்கு மண்டலங்களில் ஆய்வு செய்யப்படும். அடுத்த வாரம் ஆய்வுப் பணிகள் தொடங்கப்படும். பெங்களூரில் 57 வணிக வளாகங்கள், 77 தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் உள்ளன.
முதல் கட்டமாக சில தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வணிக வளாகங்கள் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 2-ஆம் கட்டமாக மேலும் சில தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வணிக வளாகங்கள் ஆய்வு செய்யப்படும்.
சொத்து வரியை செலுத்த கனரா வங்கி 10 இடங்களில் தாற்காலிக மையங்களைத் தொடங்கியுள்ளது. இதில் அதிக பட்சமாக ரூ. 25 ஆயிரம் வரை சொத்து வரி செலுத்த முடியும். மே மாதம் 31-ஆம் தேதி வரை சொத்துவரி செலுத்துபவர்களுக்கு 5 சதம் தள்ளுபடி செய்யப்படும். ஜூன் மாதம் தள்ளுபடி வழங்கப்படமாட்டாது. இதுவரை சொத்துவரி ரூ. 675 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் சொத்துவரி ரூ. 450 கோடி வசூல் செய்யப்பட்டது என்றார் அவர்.