அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகிறது: கர்நாடக அரசு: எச்.டி.குமாரசாமி
முதல்வர் சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசு ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வருகிறது என்று முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி தெரிவித்தார்.
பெங்களூரு பத்திரிகையாளர் சங்கம் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருந்த ஊடகத்தினருடனான சந்திப்பு நிகழ்ச்சியில், குமாரசாமி பேசியது:-
ஜந்தகல் முறைகேட்டில் என்னை (குமாரசாமி) சிக்க வைத்துள்ளதால், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தாற்காலிகமாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முதல்வர் சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசு ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வருகிறது. இதற்கெல்லாம் அஞ்சப்போவதில்லை. குற்றச்சாட்டுகளை தனிஒருவனாக எதிர்கொண்டு, வெற்றி பெறுவேன்.
ஜந்தகல் சுரங்க முறைகேடு நடைபெறாதபோது, அது குறித்த ஆவணங்களை சிறப்பு புலானாய்வு படையிடம் எப்படி தாக்கல் செய்ய முடியும். முன்னாள் முதல்வர் எடியூரப்பா முதல்வராக இருந்தப்போது, ஜந்தகல் சுரங்க முறைகேட்டில் என் (குமாரசாமி) மீது புகாரை பதியச் செய்தார். இதற்கு மக்கள் விரைவில் பதில் அளிப்பார்கள்.
நீதி, நேர்மை, ஊழல் இல்லாத ஆட்சியை வழங்குவதாக வாக்குறுதி அளித்து ஆட்சியை பிடித்த முதல்வர் சித்தராமையா, வாக்குறுதியை பின்பற்ற தவறியுள்ளார். லோக் ஆயுக்த அமைப்பை பலமிழக்கச் செய்து, ஊழல் ஒழிப்பு படையை அமைத்தவர் சித்தராமையா. அவர் ஊழலை ஒழிப்பதை பற்றி பேசி வருவது நகைப்பிற்குரியது.
கடந்த 4 ஆண்டுகளில் அரசு நீர்பாசனம், சுகாதாரம், கல்வி, சமூகநலத்துறை உள்ளிட்ட துறைகளுக்கு ஒதுக்கிய நிதியின் விவரங்களை மக்கள் முன் வைக்க தயாரா? முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு பல்வேறு துறைகளின் நிதியை தவறாகப் பயன்படுத்தி வருகிறது என்றார் அவர்.