சட்டப் பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு தலித்துகள் மீது பாஜகவுக்கு பாசம் அதிகரித்து வருகிறது என்று கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி, பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பரமேஸ்வர் பேசியதாவது:-
கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி வருகிறது.
தலித்துகளின் வீடுகளுக்கு சென்று உணவு அருந்தும் பணியில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளனர். ஹோட்டலிலிருந்து உணவை கொண்டு வந்து, தலித்துகளின் இல்லங்களில் வைத்து உண்பதால் யாருக்கு என்ன லாபம். இதனால் சமூக ஒற்றுமை ஏற்படாது. இது தலித்துகளை அவமானப்படுத்தும் செயலாகும்.
தலித்துகளின் மீது இருந்த அன்பால் அவர்களது இல்லங்களுக்கு சென்ற மறைந்த பிரதமர் இந்திரா காந்தி, அங்கு சமைக்கப்பட்ட உணவுகளை உண்டார்.
தலித்துகள், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், நலிந்த மக்களின் வளர்ச்சி குறித்து பாஜகவினர் எப்போதும் சிந்தித்து வருகின்றனர். ஆனால் இதனை பிரபலபடுத்திக் கொள்வதை காங்கிரஸ் விரும்பவில்லை. ஆனால் பாஜகவினர் என்றோ ஒரு நாள் தலித்துகளின் இல்லத்தில் உணவருந்துவதை பிரபலபடுத்தி பிரசாரம் செய்து வருகின்றனர்.
சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு தலித் மக்கள் மீது பாஜகவிற்கு பாசம் அதிகரித்து வருகிறது. இதனை அந்த சமுதாய மக்கள் நம்பத் தயாரில்லை என்றார் அவர்.