கர்நாடக மின் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமாரை காங்கிரஸிலிருந்து பிரிக்கும் பாஜகவின் முயற்சி பலனளிக்காது என்றார் முதல்வர் சித்தராமையா.
ஹுப்பள்ளி விமான நிலையத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
கர்நாடக மின் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் மீது வருமான வரித் துறை சோதனையை மத்திய அரசு ஏவிவிட்டு, விசாரணை என்ற பெயரில் அவ்வப்போது அவரை வருமான வரித் துறை அலுவலகத்திற்கு அழைத்து விசாரிக்கப்படுகிறது. அவரை பாஜகவிற்கு இழுக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கமாக உள்ளது. அவர்கள் என்ன தந்திரம் செய்தாலும், டி.கே.சிவக்குமார் காங்கிரûஸ விட்டு பாஜகவுக்கு செல்லமாட்டார். டி.கே.சிவக்குமாரையும் காங்கிரஸ் கட்சியையும் யாராலும் பிரிக்க
முடியாது.
பாஜக ஆட்சியில் முதல்வராகப் பதவி வகித்த எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோர் திப்பு சுல்தான் பயன்படுத்தியது போல குல்லாவை அணிந்து புகைப்படங்களுக்கு காட்சித் தந்தனர். தற்போது திப்பு சுல்தான் பிறந்த நாளுக்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பது வேடிக்கையாக உள்ளது.
அப்போது திப்பு சுல்தானை புகழ்ந்தவர்கள், தற்போது எதிர்ப்பது அவர்களின் இரட்டை நிலையை எடுத்துக் காட்டுகிறது. திப்பு சுல்தான் பிறந்த விழா அழைப்பிதழில் இடம் பெற்றிருந்த பாஜகவினரின் பெயர்களை உடனடியாக நீக்குமாறு உத்தரவிட்டுள்ளேன் என்றார்.