உள்துறை அமைச்சர் பதவியை கே.ஜே.ஜார்ஜ் ராஜிநாமா செய்ய வேண்டிய அவசியமில்லை என்று கர்நாடக மாநில புள்ளியியல் துறை அமைச்சரும், சட்ட மேலவை அவை முன்னவருமான சீதாராம் கூறினார்.
பெலகாவி சுவர்ண செளதாவில் திங்கள்கிழமை தொடங்கிய கர்நாடக சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியது: -
டிஎஸ்பி கணபதி தற்கொலைக்குப் பொறுப்பேற்று அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், தனது பதவியை ராஜிநாமா செய்யும்வரை சட்டப் பேரவையிலும், மேலவையிலும் பாஜக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் என அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் எடியூரப்பா கூறி வருகிறார்.
சிஐடி போலீஸாரின் விசாரணையில் அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், சிபிஐ போலீஸார் மீண்டும் விசாரணை செய்து வருகின்றனர். விசாரணைக்காக மீண்டும் கே.ஜே.ஜார்ஜை பதவி விலகக் கோருவதில் நியாயமில்லை. இதில் பாஜக அரசியல் உள்நோக்கத்துடன் பல்வேறு போராட்டத்தில் ஈடுபடுவது முறையானது கிடையாது.
கணபதி விவகாரத்தில் உண்மை வெளியே வர வேண்டும். விசாரணையில் யார் மீதாவது தவறு இருந்தால் அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும். அதுவரை பாஜகவினர் பொறுமை காக்க வேண்டும். அரசியல் காழ்ப்புணர்வில் கே.ஜே.ஜார்ஜை ராஜிநாமா செய்ய பாஜகவினர் வற்புறுத்துவதற்கு தார்மிக உரிமை இல்லை என்றார் சீதாராம்.