கிருஷ்ணா நதி நீரைப் பயன்படுத்தி வட கர்நாடகம் அடைந்த வளர்ச்சி குறித்து வெள்ளை அறிக்கையை கர்நாடக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வரும், மஜத மாநிலத் தலைவருமான எச்.டி. குமாரசாமி வலியுறுத்தினார்.
பெலகாவியில் திங்கள்கிழமை தொடங்கிய சட்டப் பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:-
கர்நாடக அரசு வட கர்நாடகத்தை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இதனால் அந்தப் பகுதி வளர்ச்சிப் பணிகளில் மிகவும் பின்தங்கியுள்ளது. கிருஷ்ணா நதிநீரைப் பயன்படுத்துவதன் மூலம் வட கர்நாடகத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல முடியும் என அரசு வாக்குறுதி அளித்திருந்தது. இதன்படி, கிருஷ்ணா நதி நீரைப் பயன்படுத்தி வட கர்நாடகம் அடைந்த வளர்ச்சி குறித்து அரசு வெள்ளை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்.
பெலகாவியில் நடைபெறும் குளிர்காலக் கூட்டத் தொடரில் மக்களுக்குப் பயனுள்ள திட்டங்களை அமல்படுத்த வேண்டும். வட கர்நாடகத்தின் பிரச்னைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வறட்சியால், கடந்த மூன்றரை ஆண்டுகளாக விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பயிர்ச் சேதங்களுக்கு உரிய இழப்பீட்டை கர்நாடக அரசு வழங்க வேண்டும். கரும்பு, மக்காச்சோளம், கடலைக்காய் உள்ளிட்டவற்றுக்கு ஆதரவு விலையை அறிவிக்க வேண்டும். சர்க்கரை விலை உயர்ந்துள்ளபோதும், கரும்பின் ஆதரவு விலையை உயர்த்தாமல் உள்ளது கண்டனத்துக்குரியது.
இதுகுறித்து மத்திய அமைச்சர்களைச் சந்திக்க அனைத்துக் கட்சியினர் குழுவை அழைத்து செல்வதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இதற்கான தேதியை அவர் உடனே அறிவிக்க வேண்டும் என்றார் குமாரசாமி.