மகதாயி நதிநீர் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, கோவா மாநில சட்டப் பேரவையை முற்றுகையிட முடிவு செய்துள்ளதாக கன்னட சளுவளி கட்சியின் தலைவர் வாட்டாள்நாகராஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: -
மகதாயி நதிநீர் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து, பெலகாவியில் திங்கள்கிழமை தொடங்கியுள்ள குளிர்காலக் கூட்டத் தொடரில் கர்நாடக அரசு உரிய தீர்மானத்தை எடுக்க வேண்டும். மறுக்கும்பட்சத்தில் கர்நாடக அரசு மட்டுமின்றி கோவா அரசையும் கண்டித்து, டிசம்பர் 9-ஆம் தேதி கோவா சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
மகதாயி நதிநீர் திட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் தோல்வி அடைந்துள்ளன. வடகர்நாடகத்தின் வளர்ச்சியில் மாநில அரசு அக்கறை காட்ட வேண்டும் என்றார் அவர்.