டி.எஸ்.பி. கணபதி தற்கொலை விவகாரத்தில் அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் பதவி விலக வலியுறுத்தி கர்நாடக பேரவை, மேலவைகளில் பாஜகவினர் செவ்வாய்க்கிழமை அமளியில் ஈடுபட்டனர்.
பெலகாவி சுவர்ண செளதாவில் செவ்வாய்க்கிழமை அவை நடவடிக்கைகள் தொடங்கியதும் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், கணபதி தற்கொலை விவகாரம் தொடர்பாக அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளனர். இதுகுறித்து ஒத்திவைப்பு தீர்மானத்தின் மீது விவாதிக்க அனுமதி தர வேண்டும் என்றார்.
இதற்கு பேரவைத் தலைவர் கோலிவாட் அனுமதியளிக்கவில்லை. இதனால், பேரவைத் தலைவர் இருக்கைக்கு முன் நின்று பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து அரசியல் லாபத்துக்காக பாஜகவினர் சபையை நடத்த விடாமல் அமளியில் ஈடுபட்டுள்ளதாக முதல்வர் சித்தராமையா குற்றஞ்சாட்டினார்.இதைத் தொடர்ந்து அவையை ஒத்திவைத்து பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்.
இதேபோல மேலவையிலும் கணபதி தற்கொலை விவகாரத்தில் அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் பதவி விலக வலியுறுத்தி பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர்.