தனியார் மருத்துவமனைகளைக் கட்டுப்படுத்தும் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மாநிலம் முழுவதும் தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டு, மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பேரவையில் மாநில அரசு தாக்கல் செய்யவுள்ள தனியார் மருத்துவமனை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த நவ.2-ஆம் தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டத்தில் தனியார் மருத்துவமனைகள் ஈடுபட்டன.
எனினும், அரசு சட்ட மசோதாவைத் தாக்கல் செய்வதில் உறுதியாக உள்ளதால், நவ. 13-ஆம் தேதி முதல் மாநில அளவில் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், 6-க்கும் மேற்பட்டோர் மருத்துவச் சிகிச்சை பெற முடியாமல் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மருத்துவர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெறுவதால், நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தனியார் மருத்துவமனை மருத்துவர்களின் போராட்டத்தால் நிலைமை மோசமானால் அதற்கு அரசே பொறுப்பு ஏற்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தனியார் மருத்துவமனைகளைக் கட்டுப்படுத்தும் சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்ய முடியாமல் போனால் தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக சுகாதாரத் துறை அமைச்சர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார். எனவே, தனியார் மருத்துவமனை மருத்துவர்களைச் சமாதானபடுத்தி, சட்ட திருத்த மசோதாவைத் தாக்கல் செய்ய மாநில அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டுள்ளது.