பெங்களூரிலிருந்து சபரிமலைக்கு சிறப்பு பேருந்து
பெங்களூரிலிருந்து சபரிமலையின் அடிவாரமான பம்பாவுக்கு சிறப்பு பேருந்து சேவை டிச.1-ஆம் தேதி இயக்கப்படுகிறது.
இதுகுறித்து கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சபரிமலைக்கு பக்தர்கள் புனிதப்பயணம் மேற்கொள்ளும் காலம் தொடங்கியுள்ளதால், பெங்களூரிலிருந்து சபரிமலையின் அடிவாரத்தில் உள்ள பம்பா நகரத்துக்கு சிறப்பு பேருந்து சேவை டிச.1-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
பெங்களூரு-பம்பா இடையே கெம்பே கெளடா பன்னாட்டு விமானநிலையத்தில் இருந்து தினமும் நண்பகல் 1.30 மணிக்குப் புறப்பட்டு, ஒசூரு, சேலம், திண்டுக்கல், குமுளி வழியாக பம்பாவுக்கு மறுநாள் காலை 8.45 மணிக்கு சென்றடைகிறது.
இதேபோல, பம்பாவில் இருந்து தினமும் மாலை 5 மணிக்குப் புறப்பட்டு, குமுளி, திண்டுக்கல், சேலம், ஒசூரு வழியாக பெங்களூருக்கு மறுநாள் நண்பகல் 12 மணிக்கு வந்தடைகிறது.
இந்த வழித்தடத்திற்கு முன்பதிவு செய்யப்படுகிறது. இதுதவிர, கர்நாடகம், கோவா, தமிழகம், மகாராஷ்டிரம், தெலங்கானா, புதுச்சேரி, கேரளம் மாநிலங்களிலுள்ள முன்பதிவு மையங்களில் 30 நாள்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. மேலும் விவரங்களுக்கு 080-49696666 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மின்-முன்பதிவு மற்றும் செல்லிடப்பேசி-முன்பதிவுக்கு www.ksrtc.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.