தேசிய அளவில் ரூ. 100 கோடியில் பிளாஸ்டிக் பொறியியல் தொழில்நுட்ப மையங்கள் தொடங்கப்படும் என்று மத்திய ரசாயனத் துறை அமைச்சர் அனந்த்குமார் தெரிவித்தார்.
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திரிபுரா மாநில திருவிழாவில் கலந்து கொண்டு அவர் பேசியது:
வட கிழக்கு மாநிலங்களில் முக்கிய மாநிலமாக திரிபுரா விளங்குகிறது. இயற்கை வளங்கள் உள்ள இந்த மாநிலத்தின் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பெங்களூரில் இந்தத் திருவிழா நடைபெறுகிறது.
விழாவில் இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. திரிபுரா மாநிலத்திலிருந்து பலர் பெங்களூரில் குடியேறியுள்ளனர். மத்திய அரசு நாட்டின் தொழில் வளத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு கட்டமாக தேசிய அளவில் ரூ. 100 கோடியில் பிளாஸ்டிக் பொறியியல் தொழில்நுட்ப மையங்கள் தொடங்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியில், திரிபுராவின் புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் செளரவ்பீ தெப்ராமா, தீதி தெப்ராமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.