கர்நாடகத்தில் பொருள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டதால் மாநில அரசுக்கு ஏற்பட்ட இழப்புக்கு ரூ.1,189 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளதாக வேளாண்துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகெளடா தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை தனியார் செய்தி நிறுவன செய்தியாளரிடம் அவர் கூறியது:
பொருள் மற்றும் சேவை வரியை கடந்த 2 மாதங்களாக (ஜூலை, ஆகஸ்ட்) கர்நாடக அரசு அமல்படுத்தியுள்ளது. இதனால், ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுசெய்யும் வகையில் மாநில அரசுக்கு ரூ.1189 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதுதொடர்பாக அக்.3-ஆம் தேதி மத்திய அரசிடம் இருந்து கடிதம் பெற்றுள்ளோம்.
பொருள் மற்றும் சேவை வரியை அடுத்த ஓரிரு ஆண்டுகள் அமல்படுத்திய பிறகு மாநில அரசின் வருவாய் சீரடையும் என்று எதிர்பார்க்கிறோம். அதன்பிறகு, மத்திய அரசிடம் இருந்து இழப்பீட்டுத் தொகையை பெற வேண்டிய அவசியமிருக்காது.இன்னும் சில மாதங்களில் நிலைமை சீரடையும் என்று எதிர்பார்க்கிறோம்.
பொருள் மற்றும் சேவை வரி அமலாக்கத்தால் மாநில அரசின் வருவாய் அதிகரிக்கும் என்று நம்புகிறோம். சரக்கு மற்றும் சேவை வரியால் மாநில அரசின் வருவாய்க்கு எந்தளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை தற்போது தெரிவிக்க இயலாது. ஜூலை மாதத்தில் மட்டும் ரூ.600 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்றார்.