கர்நாடகத்தில் உள்ள 9 அகர்வால் கண் மருத்துவமனைகளிலும் வியாழக்கிழமை (அக். 12) இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர் பிந்தியா ஹபானி செய்தியாளர்களிடம் கூறியது:
நமது உடலில் உள்ள அங்கங்களில் முக்கியமானதாக கண்கள் விளங்குகின்றன. இதனை உரிய முறையில் பாதுகாப்பதில் அலட்சியம் காட்டக்கூடாது. கண் அறுவைச் சிகிச்சையில் நவீன தொழில்நுட்பங்கள் வந்திருந்தாலும், கண்களை மிகவும் எச்சரிக்கையோடு பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
உலக கண்பார்வை தினத்தையொட்டி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் இரவு 8 மணிவரை, கர்நாடகத்தில் உள்ள அகர்வால் மருத்துவமனையில் 9 கிளைகளிலும் இலவசமாக கண் பரிசோதனை, மருத்துவ ஆலோசனை வழங்கப்படும். தீபாவளி நெருங்கு வரும் வேளையில் அனைவரும் பாதுகாப்பாக வெடிகளை வெடிக்க வேண்டும். வெடிக்கும்போது கண்ணில் காயமேற்பட்டால் உடனடியாக தூய்மையான குளிர்ந்த நீரில் கண்களை சுத்தப்படுத்திவிட்டு, உடனடியாக அருகில் உள்ள கண் மருத்துவமனைக்குச் சென்று கண்களுக்கு சிகிச்சைப் பெற வேண்டும். தீபாவளி பண்டியின் போது அகர்வால் கண் மருத்துவமனைகள் 24 மணி நேரமும் திறந்தே இருக்கும் என்றார்.
பேட்டியின் போது அம்மருத்துவமனை மருத்துவ இயக்குநர் ரவிதுரைராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.