ஊரகங்களில் தொழில் தொடங்குபவர்களிடமிருந்து சமச்சீர் சொத்து வரியை வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக சிறுதொழில் சங்கத்தின் தலைவர் ஆர்.ஹனுமந்தே கெளடா கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
மாநிலத்தில் சிறு தொழில் துறை வளர்ச்சி அடைவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. சிறு, குறு, நடுத்தரத் தொழில்சாலைகளில் 92 சத அளவில் அமைப்புசாரா தொழிலாகவே நடைபெற்று வருகிறது. இதனை அமைப்புசார்ந்த தொழில்சாலைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல்வர் சித்தராமையாவின் தலைமையிலான அரசு, மகளிர் தொழில் முனைவோர்களுக்கு 10 சத மானியத்தில், 4 சத வட்டியில் ரூ. 2 கோடி வரை கடன் வழங்கி வருகிறது. தேசிய அளவில் வேறு எந்த மாநிலத்திலும் இது போன்று மகளிர் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதில்லை.
சிறு தொழில் துறையினரை ஊக்குவிக்கும் முதல்வர் சித்தராமையாவைப் பாராட்டி, கெளரவிக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (அக்.13) விஜயநகர் காசியா அரங்கத்தில் மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் அமைச்சர்கள் மோகனகுமாரி, எம்.கிருஷ்ணப்பா, எச்.ஆர்.ரேவண்ணா, பிரியாகிருஷ்ணா எம்.எல்.ஏ உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். மேலும், நவ.23,24-ஆம் தேதிகளில் பெங்களூரு சர்வதேச மாநாட்டு அரங்கத்தில் கொள்முதல் செய்வோர் வளர்ச்சி கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில் 500 க்கும் மேற்பட்ட அரங்கங்கள் இடம்பெற உள்ளன. இதில் சிறுதொழில் துறையினர் தங்களின் உற்பத்தி பொருள்களைக் காட்சிப்படுத்தலாம். இதற்கான அரங்கம் இலவசமாக முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். இதில் மாநில அளவிலான தொழில்துறையினர் பங்கேற்க வேண்டும் என்றார்.
பேட்டியின் போது கர்நாடக சிறுதொழில் சங்கத்தின் துணைத் தலைவர் பசவராஜ் ஜவளி, செயலாளர் உமாசங்கர், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, லதாகிரிஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.