தீபாவளி: 1,500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கர்நாடகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் 1,500 சிறப்பு பேருந்துகளை இயக்க  மாநில சாலை போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கர்நாடகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் 1,500 சிறப்பு பேருந்துகளை இயக்க  மாநில சாலை போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பெங்களூரிலிருந்து மாநிலத்தின் பல்வேறு நகரங்களுக்கு அக்.17 முதல் அக்.19-ஆம் தேதி வரை கூடுதலாக 1,500 சிறப்பு பேருந்துகள் இயக்க கர்நாடகமாநில சாலை போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.
இந்த சிறப்பு பேருந்துகள் பெங்களூரில் உள்ள கெம்பே கெளடா பேருந்துநிலையம், மைசூரு சாலை பேருந்துநிலையம், சாந்திநகர் பேருந்துநிலையம் உள்ளிட்ட பல்வேறு பேருந்துநிலையங்களில் இருந்து இயக்கப்படுகின்றன. இதுதவிர, மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து அக்.22 முதல் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவிருக்கின்றன.
வெளிமாவட்டங்கள்
கெம்பே கெளடா பேருந்து நிலையத்தில் இருந்து தர்மஸ்தலா, குக்கேசுப்ரமணியா, சிவமொக்கா, ஹாசன், மங்களூரு, குந்தாபுரா, சிருங்கேரி, ஹொரநாடு, தாவணகெரே, ஹுப்பள்ளி, தார்வாட், பெலகாவி,விஜயபுரா, கோகர்ணா, சிர்சி, கார்வாட், ராய்ச்சூரு, கலபுர்கி,பெல்லாரி, கொப்பள், யாதகிரி, பீதர், திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படவிருக்கின்றன.
மைசூரு சாலை துணை பேருந்து நிலையத்தில் இருந்து மைசூரு, ஹுன்சூர், பிரியாப்பட்டணா, விராஜ்பேட், குஷால்நகர்,மடிக்கெரி நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
வெளியூர் பேருந்துகள்
மதுரை, கும்பகோணம், திருச்சி, சென்னை, கோயமுத்தூர், திருப்பதி, விஜயவாடா, ஹைதராபாத் உள்பட தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களின் பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு சொகுசுப் பேருந்துகள் சாந்திநகர் பேருந்துநிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
விஜயநகர், ஜே.பி.நகர், ஜெயநகர் 4-ஆவது பிளாக், 9-ஆவதுபிளாக், ஜாலஹள்ளி குறுக்குத்தெரு, நவரங்(ராஜாஜிநகர்),மல்லேஸ்வரம் 18-ஆவது குறுக்குத்தெரு, கெங்கேரி சாட்டிலைட் பேருந்துநிலையங்களில் இருந்தும் சிவமொக்கா, தாவணகெரே, திருப்பதி, மங்களூரு, குந்தாபுரா, சிருங்கேரி, ஹொரநாடு, குக்கேசுப்ரமணியா, தர்மஸ்தலா உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்புபேருந்துகள் இயக்கப்படுகின்றன. முன்பதிவு செய்யாத பயணிகளுக்கும் கெம்பேகெளடா பேருந்துநிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முன்பதிவு வசதி
சிறப்பு பேருந்துகளில் பயணிக்க முன்பதிவுசெய்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. w‌w‌w.‌k‌s‌r‌t​c.‌i‌n  என்ற இணையதளம் வழியே முன்பதிவு செய்துகொள்ளலாம். பெங்களூரில் உள்ள 115, மைசூரில் உள்ள 17, மங்களூரில் உள்ள 75 உள்ளிட்ட 286 முன்பதிவு மையங்களில் சிறப்பு மற்றும் வழக்கமான பேருந்துகளுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஒரே பயணச்சீட்டில் 4 பேருக்கு மேற்பட்டோருக்கு முன்பதிவு செய்தால் 5 சத தள்ளுபடியும், மறு பயணம் மேற்கொண்டால் 10 சத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. பெங்களூரு தவிர, மாநிலத்தின் இதர நகரங்களில் இருந்தும் வெவ்வேறு நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த வசதியை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com