பெங்களூரில் மழையால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைப்பதில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு தோல்வியடைந்துள்ளதாக கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா குற்றஞ்சாட்டினார்.
பெங்களூரில் வியாழக்கிழமை மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய பின்னர், செய்தியாளர்களிடம் எடியூரப்பா கூறியது:
பெங்களூரில் பெய்த பலத்த மழையால் சாலைகள் அனைத்து சேதமடைந்துள்ளன. அவற்றை சரிசெய்வதில் அரசு மெத்தனமாகச் செயல்படுகிறது. இதுவே காங்கிரஸ் அரசின் தோல்விக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. மாநகரில் உள்ள அனைத்து சாலைகளிலும் சுமார் 16 ஆயிரம் குழிகள் ஏற்பட்டுள்ளதாக பெங்களூரு வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜே உறுதிபடுத்தியுள்ளார்.
சாலைகளை மேம்படுத்த அரசு ஆயிரம் கோடிகளைச் செலவிட்டும் மழைக்கு பெங்களூரு முழுவதும் உள்ள சாலைகள் சேதமடைந்துள்ளன.
இந்த சாலைகளில் பயணித்த 7 பேர் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர். இதற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். நிர்வாக திறன் இல்லாத, முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசை மக்கள் தூக்கி எறிய வேண்டும் என்றார்.
பேட்டியின் போது, எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், துணைத் தலைவர் ஆர்.அசோக், சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.