தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பட்டாசுகள் வெடிக்கும்போது கவனத்துடன் இருக்க வேண்டும் என்று கர்நாடக மாநில தீயணைப்பு, அவசரச் சேவைத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து அந்தத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தீபாவளிக்கு புத்தாடை உடுத்துவது, பலகாரங்கள் செய்து உறவினர்களுக்கு விருந்தளித்து உண்பது போன்ற கொண்டாட்டங்களுக்கு இடையே பட்டாசு வெடித்து மகிழ்வது குழந்தைகளுக்கு மட்டுமன்றி, பெரியவர்களுக்கும் குதூகலத்தை
அளிப்பதாகும்.
தீபாவளி என்ற சம்பிரதாயங்களுக்காகவாவது பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற விருப்பம் காணப்படுகிறது. பட்டாசு வெடிப்பது அவசியமா? அதனால் விளையும் நன்மை என்ன? சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளை அறிந்திருக்கிறோமா? என்பதைவிட பட்டாசுகளைப் பாதுகாப்பாக வெடிப்பதால் அன்றைக்கு இல்லத்தில் பூத்துக்குலுங்கும் மகிழ்ச்சிக்கு எல்லையிருக்காது.
எனவே, பட்டாசுகளை வெடிக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக, குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்கும்போது, பெரியவர்கள் உடனிருக்க வேண்டும். தனியாக பட்டாசு வெடிக்க குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது.
வெட்டவெளியில் பட்டாசு கொளுத்துவதுதான் பாதுகாப்பானதாகும்.
எந்தக் காரணத்தைமுன்னிட்டு வீட்டுக்குள் பட்டாசுகளை பற்ற வைக்கக் கூடாது. கூடுமானவரை உடம்பில் படும்படியாக இறுக்கமான ஆடைகளை அணிய வேண்டும். மத்தாப்புகளைக் கொளுத்தும்போது உடம்பில் இருந்து தூரத்தில் வைத்து
கொள்ளவேண்டும்.
பட்டாசுகளை பக்கவாட்டில் இருந்து கொளுத்த வேண்டும். பாத்திரங்கள் அல்லது குறுகிய இடங்களில் வைத்து பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. பட்டாசுகளை சட்டை அல்லது கால்சட்டை பையில் வைக்கக் கூடாது. வெப்பமான இடங்களில் பட்டாசுகளை சேமிக்கக் கூடாது.
பற்ற வைத்த பட்டாசுகள் வெடிக்காவிட்டால் அதன் அருகில் சென்று சோதிக்கக் கூடாது. பூந்தொட்டிகளை கையில் வைத்தப்படி பற்ற வைக்கக் கூடாது. ராக்கெட்களை பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது.
வீண்பெருமைக்காக பட்டாசுகளை கவனக்குறைவாக வெடிக்க வைக்கக் கூடாது. பட்டாசு வெடிக்கும்போது அருகில் தண்ணீரை வைத்துகொண்டு, எதேச்சையாக காயம் ஏற்பட்டால், அதன்மீது தண்ணீரை ஊற்ற வேண்டும்.
சிசுக்கள், முதியோர், நோயாளிகளை கவனத்தில்கொண்டு மருத்துவமனை, முதியோர் இல்லங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் அதிகம் ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்காமல் தவிர்க்கவேண்டும்.
பட்டாசுகளைப் பாதுகாப்பாக வெடிப்போம். பண்டிகையை இனிமையாக்குவோம் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.